வேலி காத்தான்
அத்தியாயம் : 121
தோழி காஞ்சிகா சொன்னதை கேட்டதும் இளவரசி மீனலோசனி வெட்கத்தில் நெளிந்தாள். என்னம்மா வழக்கத்திற்கு மாறாக இந்த மாலை மயங்கும் நேரத்தில் உறக்கம். மேலாடை அலைபாய, கூந்தல் கலைந்து கிடக்கிறதே! ஒரே விந்தையாக இருக்கிறது. தாங்கள் நலமாக தானே உள்ளீர்கள்? இல்லை தங்களின் தேக ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்னையா? ஒன்றும் இல்லையடி. பின் ஏனம்மா எதையோ பறி கொடுத்தது போல் தோற்றமளிக்கிறீர்கள்? சரி.. சரி.. இந்தாருங்கள் இந்தப் பழச்சாற்றை அருந்துங்கள் என்றவாறே மீனலோசனியின் கூந்தலை சரி செய்தாள். வேண்டாமடி காஞ்சிகா எனக்கு பசி இல்லை. பழச்சாற்றை வாங்கி பக்கத்தில் வைத்தாள் மீனலோசனி. காஞ்சிகா இளவரசியின் நெற்றி பொட்டில் கை வைத்து பார்த்தாள். என்னம்மா! இப்படி கொதிக்கிறதே? தங்களுக்கு காய்ச்சல் என்று நினைக்கிறேன். இப்போதே அரண்மனை வைத்தியரை வரச் சொல்கிறேன். காஞ்சிகா சட்டென்று எழுந்தாள். மீனலோசனி அவளது இடது கையை இறுகப் பற்றி இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தாள். உடம்புக்கு ஒன்றும் இல்லையடி. மனசு தான் அலைபாய்கிறது. என்னம்மா சொல்கிறீர்கள்? ஆமாம் காஞ்சிகா எனக்கு பசி தொலைந்து போய்விட்டதடி. கண்களை மூடினால் உறக்கம் வரவில்லை. சதா அவன் ஞாபகம் சிந்தையில் வந்து மோதுதடி. யாரம்மா அது? காஞ்சிகா ஒன்றும் தெரியாதது போல் கேட்டாள். எல்லாம் தெரிந்தும் ஏனடி ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாய்?புரிந்து விட்டதம்மா. தங்களைப் பீடித்து இருக்கும் நோயை தீர்க்க இந்த அரண்மனையில் மருந்து இல்லையம்மா. அதற்கு நாம் நமது விருந்தினர் மாளிகைக்கு தான் போக வேண்டும். இளவரசி மீனலோசனி வெட்கத்தில் தனது இரு கைகளால் முகத்தை இறுக மூடிக் கொண்டாள்.
தொடரும்..
© VIGNU GHOUSIKA
Related Stories